Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறியூட்டிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு: சென்னை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

சென்னை மாநகராட்சி சார்பில், மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறியூட்டிகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.

சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, கரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் ஆக்சிஜன் செறியூட்டிகள், சென்னை மாநகராட்சியின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு 50 ஆக்சிஜன் செறியூட்டிகள், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 33, கிண்டி கிங்ஸ் மருத்துவமனைக்கு 50, தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்கு 80, சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு 40, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு 40 என 293 ஆக்சிஜன் செறியூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று பார்வையிட்டு, ஆக்சிஜன் செறியூட்டிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள கரோனா சிகிச்சை மையத்திலும் ஆக்சிஜன் செறியூட்டிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x