Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் வீட்டில் 14 பவுன் நகைகள் திருட்டு

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாப்பான்குளம் பகுதியில் வசித்து வருபவர் பெட்ரிக் ஞானதுரை (53). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹெனா மெரோலினி அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில் பெட்ரிக் ஞானதுரைக்கு கடந்த 4-ம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து பெட்ரிக் ஞானதுரை நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டினுள் சென்றபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் வெளியே வீசப்பட்டிருந்தன. இதுகுறித்து அரக்கோணம் நகர காவல் துறையினருக்கு பெட்ரிக் ஞானதுரை தகவல் தெரிவித்தார். அதன்பேரில், நகர காவல் துறையினர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். அதில், பூட்டிய வீட்டின் பின்பக்கம் வழியாக நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 14 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், வீட்டின் மற்றொரு இடத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 60 பவுன் நகைகள் மர்ம நபர்களிடம் இருந்து தப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x