Published : 12 May 2021 03:15 AM
Last Updated : 12 May 2021 03:15 AM

லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம்: ராணிப்பேட்டை எஸ்பி டாக்டர் சிவகுமார் உத்தரவு

மண் கடத்தல் புகாரில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையி னரால் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு காவலர்கள் இருவர் தூக்கியடிக்கப்பட்டு புதிய காவலர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சோளிங்கர் அருகேயுள்ள புலிவலம் கிராமத்தில் சார் ஆட்சியர் இளம்பகவத் மண் கடத்தல்கும்பலை பிடிக்க முயன்றார். அப்போது, மண் கடத்தும் நபர் சரவணன் என்பவர் தப்பியோடும் போது அவரது செல்போன் சார் ஆட்சியர் வசம் கிடைத்தது. அதை ஆய்வு செய்தபோது அவருக்கும், முன்னாள் ராாணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து தற்போது ஈரோடு ஆவின் பொது மேலாளராக இருக்கும் முருகேசன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. மேலும், மண் கடத்தலுக்காக இவர்களுக்கு இடையில் பணப்பரிமாற்றம் குறித்த விவரங்கள் வாட்ஸ்-அப் உரையாடலாகவும் பதிவாகி யிருந்தன.

இது தொடர்பாக சார் ஆட்சியர் இளம்பகவத் அளித்த புகாரின்பேரில் ஆவின் பொது மேலாளர் முருகேசன் உள்ளிட்ட 19 பேர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் சோளிங்கர் காவல் ஆய்வாளராக இருந்த எம்.வெங்கடேசன், சோளிங்கர் உதவி ஆய்வாளராக இருந்த மகாராஜன், பாஸ்கரன், கொண்டபாளையம் காவல் நிலைய காவலர் விஜய பாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், சோளிங்கர் தனிப்பிரிவு தலைமை காவலர் பச்சையப்பன், தலைமை காவலர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோர் சரவணனுடன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதற்கிடையில், லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு தனிப்பிரிவு காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உத்தர விட்டுள்ளார். அதன்படி, தற்போது அவளூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக உள்ள பச்சையப்பன் மற்றும் காவேரிப்பாக்கம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் தனிப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டு சட்டம்- ஒழுங்கு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதிதாக சீனிவாசன் என்பவர் அவளூர் காவல் நிலைய தனிப்பிரிவுக்கும், காவேரிப்பாக்கம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள இரண்டு பேருக்கும் விரைவில் காவல் நிலைய பணி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x