Published : 11 May 2021 07:11 PM
Last Updated : 11 May 2021 07:11 PM

கரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க சைல்டுலைன் அலுவலகத்தை தொடர்பு கொள்க: நெல்லை ஆட்சியர்

திருநெல்வேலி

கரோனாவால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையிலுள்ள குழந்தைகளைப் பாதுகாக்க சைல்டுலைன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு நெல்லை ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து ஆதரவளிக்கும் படியும், உதவிசெய்யும் படியும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவிவருகிறது.

இவ்வாறு குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பது இளைஞர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015- ன் படி குற்றமாகும். தத்தெடுப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் குழந்தைகளை கொடுக்கவோ அல்லது பெறவோ செய்தால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபாரதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறான செய்தியை வாட்ஸ்அப் குழுவிலோ அல்லது தனிநபர்களுக்கிடையிலோ பரப்புவதும் குற்றமாகும். சட்டரீதியாக தத்தெடுக்க விரும்புவர்கள் www.cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம். தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை பெற விரும்பினால் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு அல்லது சிறப்பு தத்துமையத்தை தொடர்பு கொள்ளலாம்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பு நேரிட்டிருந்தாலோ அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பட்சத்தில் அக்குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதுகாத்திட குழந்தை நலக்குழு, மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டுலைன் ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: சைல்டுலைன் - 1098. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 0462 - 2901953, 2551953. குழந்தை நலக்குழு 0462 – 2321098.

குழந்தைத் திருமணம்

குழந்தைத் திருமணம் என்பது 21 வயதுக்குட்பட்ட ஆணுக்கும், 18 வயதுக்குட்டபட்ட பெண்ணுக்கும் இடையே நடப்பதாகும். குழந்தை திருமணம் காரணமாக இளம் வயதில் கருத்தரித்தல், கருச்சிதைவு, தாய்சேய் மரணம், ரத்தசோகை போன்ற பிரச்சனைகளும், குழந்தைகள் எடைக்குறைவாகவும் மற்றும் உடல் மனக்குறைபாடு உள்ள குழந்தைகளாக பிறப்பதற்கும் அபாயம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக படிக்கும் வயதில் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைபட்டு தன்னம்பிக்கை குறைந்து, அதனால் எதிர்காலத்தை இழக்கும் அபாயமும் குழந்தைகளுக்கு உள்ளது.

ஆனால் இவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சமூகத்தில் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைப்பது பரவலாக காணப்படுகிறது. வரும் 14-ம் தேதி அட்சய திருதியை நாளை முன்னிட்டு குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெற வாய்பிருப்பதாக தெரியவருகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போருக்கு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2006-ன் படி 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபாரதம் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

எனவே, பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது பொதுமக்கள் குழந்தைத் திருமணம் குறித்த தகவல் மற்றும் புகார்களை சைல்டுலைன் - 1098, மாவட்ட சமூக நல அலுவலகம் 0462 2576265 மற்றும் மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகு 0462 – 2901953, 2551953 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x