Published : 11 May 2021 06:49 PM
Last Updated : 11 May 2021 06:49 PM

மதுரை அரசு மருத்துவமனையில் கரோனாவில் இறந்தவர் உடல்களைப் பெறுவதில் தாமதம்: மாநகராட்சி மயானங்களில் எரிப்பதற்கும் ‘வரிசை முறை’

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனாவால் இறந்தவர்கள் உடல்களைப் பெறுவதற்கும், மாயானங்களில் எரிப்பதற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மயானங்களில் உடல்களை எரிப்பதற்கு வரிசை முறை கடைபிடிக்கப்படுவதால் இறந்தவர் உறவினர்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.

மதுரையில் ‘கரோனா’ முதல் அலையை விட இரண்டாவது அலையால் மிக அதிக பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது.

15 முதல் 17 பேர் வரை சிகிச்சைப் பலனளிக்காமல் இறக்கின்றனர். கரோனா இறப்பு இதை விட இன்னும் அதிகமாக இருப்பதாகவும், ஆனால் அவற்றை மருத்துவமனை நிர்வாகம் மறைத்தே வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கரோனா பாதித்த நோயாளிகள் 5 முதல் ஒரு வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பினர்.

ஆனால், தற்போது உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆகிவிடுகின்றன.

மற்ற சாதாரண படுக்கைகளில் சிகிச்சை பெறுகிறவர்களும் குணமடைந்து வீடு திரும்ப ஒரு வாரம் ஆகிவிடுகிறது. நோயாளிகள் குணமடையும் நாட்கள் அதிகரித்துள்ளதால் நோயாளிகள் படுக்கை வசதியில்லாமல் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை என்று ஆம்புலன்ஸ்களில் சுற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைக்காக நோயாளிகள் வெளியே ஆம்புலன்ஸில் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி நோயாளிகள் காத்திருக்கும் அவலத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனால், இறந்தவர்கள் உடல்களை வாங்கி, மயானங்களில் எரிப்பதற்கும், அடக்கம் செய்வதற்கும் வரிசை முறையை கடைபிடிக்கும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

ஒருவர் வார்டில் கரோனா தொற்றால் இறந்தாலே அவரின் உடலைp பெற்று அடக்கம் செய்வதற்கு ஒரு நாள் காத்திருக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கரோனாவால் இறக்கும் நோயாளிகளை அடக்கம் செய்வதற்கோ, எரிப்பதற்கோ உடலை எடுத்துச் செல்வதற்கு தனியார் ஆம்புலன்ஸை பயன்படுத்தக்கூடாது. அரசின் இலவச ஆம்புலன்ஸைத்தான் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனால், போதுமான இலவச ஆம்புலன்ஸ்கள் இல்லாததால் மருத்துவமனைகளில் இறப்போர் உடல்களைப் பெற்று மயானம் அல்லது கல்லறைத்தோட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி மாயானத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் மாலை வரையே எரிக்க முடிகிறது.

எனவே, கரோனாவுக்கு சிகிச்சை பெற படுக்சைகளுக்கு விஐபிகள் பரிந்துரையைப் பிடித்து மருத்துவமனையில் சேருவதைப் போல், தற்போது உடல்களைப் பெற்று அடக்கம் அல்லது எரிக்கச் செய்வதற்கு பரிந்துரையுடன் மருத்துமனைகளில் சொன்னால் மட்டுமே ஒரளவு உடல்கள் விரைவாகக் கிடைக்கிறது.

அப்படியே மருத்துவமனைகளில் உடல்களைப் பெற்று ஆம்புலன்ஸில் மயானத்திற்கு கொண்டு சென்றாலும் அங்கும் எரிப்பதற்கு வரிசை முறையில இறந்தவர்களின் உறவினர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது.

மாநகராட்சி மயானங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, இரவிலும் உடல்களை எரிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை விரைவாக ஒப்படைக்கவும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x