Last Updated : 11 May, 2021 06:10 PM

 

Published : 11 May 2021 06:10 PM
Last Updated : 11 May 2021 06:10 PM

கூட்டணியில் குழப்பமும், சிக்கலும் இல்லை: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி

கூட்டணியில் குழப்பமும், சிக்கலும் இல்லை என, புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மத்திய அரசு மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (மே 11) நடைபெற்றது. இதில், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதனையடுத்து, நியமன எம்எல்ஏக்கள் 3 பேரும், மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் செல்வம் உள்ளிட்டோரிடம் வாழ்த்து பெற்றனர்.

பின்னர், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரிக்கான நியமன எம்எல்ஏக்கள் நியமனம் குறித்து, எங்களது கூட்டணிக் கட்சிகளுக்கும், முதல்வர் ரங்கசாமிக்கும் தகவல் தெரியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே குழப்பம் இல்லை. கூட்டணி தர்மத்தின்படியே நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று சிகிச்சை முடிந்து முதல்வர் ரங்கசாமி வந்த பிறகே அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஆட்சி அமைப்பதில் குழப்பம் என்று கூறப்படும் ஊகங்களுக்கு இடமில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் சிறப்பாக நடைபெறும். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போதிய பலம் இருக்கிறது. தங்களது தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில், சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும், சிக்கலும் இல்லை" என்று சாமிநாதன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x