Last Updated : 11 May, 2021 05:26 PM

 

Published : 11 May 2021 05:26 PM
Last Updated : 11 May 2021 05:26 PM

கரோனா சவால்களை வென்ற பிறகு நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தப்படும்: கனிமொழி எம்.பி தகவல்

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தூத்துக்குடி

கரோனா நோய் சவால்களை எதிர்கொண்டு வென்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் திமுக அரசு வலியுறுத்தும் என தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி, தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பு மருந்துகளை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் கூட, அதற்கு ஆகும் மருத்துவச் செலவை தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

கரோனா நோயாளிகளின் விரிவான சிகிச்சைக்கு தேவையான கூடுதல் படுக்கை வசதிகளையும், ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் திருமணம் மண்டபங்களையும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால் அத்தகைய தேவை ஏற்படா வண்ணம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் அந்த நிலைமைக்கு போகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கரோனா தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓரிரு நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கரோனா தடுப்புப் பணிகளை துரிதப்படுத்தி நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பார்கள். கரோனா நோய் சவால்களை எதிர்கொண்டு வென்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் திமுக அரசு நிச்சயம் வலியுறுத்தும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x