தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் தலைமைக் காவலர் கைது: தாய்மாமன் கொலைக்கு பழிக்குப் பழியாக செய்ததாக வாக்குமூலம்
தூத்துக்குடியில் ரவுடி கொலை வழக்கில் காவல் துறை தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்மாமாவை கொலை செய்ததற்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலையை தலைமைக் காவலர் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 9-ம் தேதி இரவு, தூத்துக்குடி மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (41) என்பவர் கத்தி குத்து காயங்களுடன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு அவர் மீது குற்ற வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக லூர்து ஜெயசீலன் சிப்காட் வளாகத்தில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி எதிரிகளை விரைவாக கைது செய்ய மணியாச்சி டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் சிப்காட் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன்ராஜ் (39) என்பவரை முதலில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொலையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் பொன் மாரியப்பன் (39) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் பொன் மாரியப்பனை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட லூர்து ஜெயசீலன் கடந்த 06.08.1998 அன்று மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த அழகு என்பவரை கொலை செய்துள்ளார். இந்த அழகு தலைமைக்காவலர் பொன் மாரியப்பனின் தாய்மாமா ஆகும். 23 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனது தாய்மாமா கொலைக்கு பழிக்கு பழியாக மோகன்ராஜ் உடன் சேர்ந்து லூர்து ஜெயசீலனை, பொன் மாரியப்பன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பொன் மாரியப்பனை போலீஸார் கைது செய்தனர்.
இந்த தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரி காவல் துறையை சேர்ந்தவர் என்ற போதிலும் விரைவாக கைது செய்த தனிப்படை போலீஸாரை வெகுவாக பாராட்டினார்.
