

ராமநாதபுரம் ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டுகளுக்குச் சென்ற வசதிகள், சிகிச்சை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கரோனா பாதித்த பகுதி மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதி, தடுப்பு நடவடிக்கைகள், காய்ச்சல் முகாம்களைப் பார்வையிட்டார்.
கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்கு அவ்வப்போது அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வந்தார்.
இந்நிலையில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நேற்று இரவு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து ஆட்சியருடன் ஆய்வுப்பணிகளில், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ற பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை முதல் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஆட்சியருடன் தொடர்பில் இருந்த பல அதிகாரிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.