Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

தேனி அருகே வேதபுரி ஆசிரமத்தை நிர்வகித்து வந்த சுவாமி ஓம்காரநந்தா முக்தி அடைந்தார்

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் வேதபுரி ஆசிரமத்தை நிர்வகித்து வந்த ஸ்ரீல பூஜ்யஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமிகள் நேற்று முக்தி அடைந்தார்.

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் முல்லைப் பெரியாற்றங்கரையில் வேதபுரி ஆசிரமம் உள்ளது. இதனை நிர்வகித்து வந்ததுடன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி குருபகவான் ஆலயத்திலும் ஓம்காரநந்தா சுவாமிகள் தலைமைப் பொறுப்பில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

வாழும் வள்ளுவர்

திருக்குறள் மீது அதீதப் பற்றுக்கொண்ட இவர் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் குறித்து வாரக்கணக்கில் உரை நிகழ்த்துவது வழக்கம். இதனால் இவரை வாழும் வள்ளுவர் என்று பக்தர்கள் அழைப்பது வழக்கம்.

நான்கு வேதங்களையும் பாராயணம் செய்யக் கூடிய வல்லமை படைத்தவர். வி்ஷ்ணுசஹஸ்ரநாமம் உள்ளிட்ட பல்வேறு நூல்களுக்கு விளக்கவுரை அளித்து புதுமை செய்தவர். புதுக்கோட்டை புவனேஸ்வரி மடத்தின் மடாதிபதியாகவும் இருந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதில் இருந்து மீண்ட இவருக்கு நேற்று உடல் நிலை மேலும் மோசமானது. இதைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக மும்பையில் இருந்து ஏர்ஆம்புலன்ஸ் மதுரை வந்தது.

ஹெலிபேடுக்கு கொண்டு செல்லும் வழியிலே இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மீண்டும் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கே சுவாமி ஓம்காரநந்தா கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிறு வயதிலே துறவறம் பூண்ட இவருக்கு பல்வேறு நாடுகளிலும் பக்தர்கள் உள்ளனர். அரண்மனைப்புதூர் ஆசிரமம் அருகிலேயே ஏராளமான குடில்கள் உள்ளன. இங்கு வெளிநாட்டுப் பக்தர்கள் வந்து தங்கி இவரிடம் ஆசி பெற்றுச் செல்வது வழக்கம். முக்தி அடைந்த தகவலால் பக்தர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

கீதை சொற்பொழிவு

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரைச் சேர்ந்த இவர், கீதை குறித்த தொடர் சொற்பொழிவை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நிகழ்த்தியுள்ளார்.

ஆன்மிகத்தை வாழ்வியலோடு தொடர்புப்படுத்தி ஏராளமான கட்டுரைகளை எழுதி உள்ளார்.

இவரின் மூதாதையர் பலரும் வேதசாஸ்த்ரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். தந்தை வைத்தியநாதன் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வேத பண்டிதர். இவரது தாயார் அலமேலு. இவர்தான் சுவாமியின் சிறு வயதிலேயே ஏராளமான சுலோகங்களை கற்றுக் கொடுத்து ஆன்மிகத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x