Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கரோனா கட்டுப்பாட்டை மீறி ஸ்மார்ட் கார்டு வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்: ரேஷன் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தல்

கரோனா கட்டுப்பாட்டை மீறி புதிய ஸ்மார்ட் கார்டு வாங்க தாம்பரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்த இடம் நோய் பரவல் இடமாக மாறியது.

கரோனா பரவலை தடுக்க நேற்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர மற்றவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் நேற்று காலை, ‘ஸ்மார்ட் கார்டு’ வாங்க, கார்டுதாரர்கள் குவிந்தனர். ஒரேநாளில், 230 பேர் வரை கார்டுவாங்க வந்தனர். அவர்கள், சமூகஇடைவெளியையும் பின்பற்றவில்லை. இதனால், அலுவலகமே நோய் பரப்பும் மையமாக மாறியது.

ஓரிரு நாட்களில் முடிவடையும்

இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலக அதிகாரிகள் கூறும்போது, "தேர்தல் காரணமாக, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகள் தடைபட்டிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது விடுபட்ட கார்டுதாரர்களுக்கு, கார்டுகள் வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளன. போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொது மக்கள் அச்சமின்றி, கார்டுகளை வந்து வாங்கிச் செல்லலாம். ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடிந்து விடும்" என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "இந்த அலுவலகத்தில் கார்டு பெற புதிதாக விண்ணப்பிப்பவர்களை 6 மாதங்களுக்கும் மேலாக இங்குள்ள அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். தற்போது கூட அரசின் நிவாரணத் தொகையை பெற ஸ்மார்ட் கார்டுவேண்டும் எனக்கூறி பலர்அலுவலகத்தை முற்றுகையிட்டதால்தான் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஊரடங்கில் வெளியே வருவது அச்சத்தையே ஏற்படுத்துகிறது. ரேஷன் கடை மூலம் கார்டுகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x