மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடக்கம்: ஆர்டிஐ தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடக்கம்: ஆர்டிஐ தகவல்
Updated on
2 min read

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட டெண்டர் நடைமுறை தொடங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாசலப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற ஐந்து மாநிலங்களில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைப்பதாக அறிவிித்தது.

இதற்காக 2018-ம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துமனை இடம் தேர்வு செய்யப்பட்டு, மதுரையிலும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கு பின்னர் ஒரு வருடம் கழித்து 27.01.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு நேரடியாக வந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இடம் தேர்வு செய்வதற்கு மூன்று ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் அடிக்கல் நாட்ட ஓராண்டு ஆனது. தற்போது அடிக்கல்நாட்டி 2 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டுமானம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், 2 ஆண்டுகளை கடந்தும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை.

கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தப்படி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு இருந்தால் இந்நேரம் தென் மாவட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக் பெரும் உதவியாக இருந்திருக்கும்.

குஜராத்தில் 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு தற்போது தற்காலிக கட்டிடத்தில் எய்ம்ஸ் இயங்குகிறது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுவந்த நிலையில் நிரந்தர கட்டிடப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. உடனே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தம் மற்றும் கட்டுமானப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், மதுரை எய்ம்ஸ் கடன் ஒப்பந்தமானது 26.03.21 அன்று இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. கடன் தொகை மதிப்பு 22.788 பில்லியன் ஜப்பானிய யென். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1536.91 கோடிகள் ஆகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடி. இதனால், திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளது என்றும், இந்த திட்ட மதிப்பீடு உயர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும், டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில்,

"கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. டெண்டர் பணிகள் விரைவில் முடித்து கட்டுமான நிறுவனத்தை விரைவில் முடிவு செய்து, கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். 750 படுக்கை வசதியுடன் கூடிய மதுரை எய்ம்ஸில் 100 எம்பிபிஎஸ் இடங்களும் 60 நர்சிங் இடங்களும் வர இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தற்காலிக கட்டிடங்களைத் தேர்வு செய்து மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in