Last Updated : 10 May, 2021 05:21 PM

 

Published : 10 May 2021 05:21 PM
Last Updated : 10 May 2021 05:21 PM

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: அந்தந்தப் பகுதியிலேயே செலுத்த சிறப்பு ஏற்பாடு

ஆண்டிபட்டி

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாறாக அந்தந்த பகுதிகளிலேயே தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இதற்காக தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகள், தேனி அல்லிநகரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட நகர சுகாதார நிலையம் அருகில் உள்ள நகராட்சிப் பள்ளி, சின்னமனூர் நகர சுகாதார நிலையம், கோம்பை, காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், டி.சுப்புலாபுரம், எம்.சுப்புலாபுரம், ராஜதானி மற்றும் கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 15இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்று வருகிறது.

தற்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கரோனா தடுப்பூசி போடும் பணி இங்கு தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி மாவட்டத்தின் 15இடங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதலின்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.

கரோனா கட்டுப்பாட்டு அறை; 24 மணி நேர வசதி:

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி குறித்து பொதுமக்கள் விவரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் கரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

இந்த அறைக்கு (04546) 261093 மற்றும் சுகாதாரத்துறையின் 04546 291971 ஆகிய எண்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிலோ தமிழக அரசின் கட்டணமில்லா 1077 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என்று ஆ்டசியர் ஹெச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x