Published : 10 May 2021 05:23 PM
Last Updated : 10 May 2021 05:23 PM

திருப்பூரில் சோகம்: ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா தொற்றாளர்கள் மூவர் உயிரிழப்பு 

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற ஆம்புலன்ஸில் காத்திருந்த கரோனா தொற்றாளர்கள் மூவர் இன்று உயிரிழந்தனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு 281 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 150 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருப்பவை. இந்த நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்களது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள மண்டபம் மற்றும் அவிநாசி தனியார் கல்லூரி பகுதிக்கு சிகிச்சைக்கு அனுப்புகின்றனர்.

இன்று காலை ஒரே நாளில் தொற்றாளர்கள் பலர் சிகிச்சைக்காக வளாகத்தின் வெளியே காத்திருந்தனர். அப்போது ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன் வசதியுடன் சிலர் காத்திருந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 55 வயது ஆண், 40 வயதுப் பெண், மற்றொரு நடுத்தர வயது ஆண் என மூவர் திடீரென உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வள்ளி கூறும்போது, ''திருப்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்கள் அறை நிரம்பிவிட்டது. வரும் நோயாளிகளின் நிலையைப் பொறுத்து, இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கிறோம்.

தொற்றாளர்கள் யாரும் எங்களைத் தொடர்புகொண்டு கேட்காமல் வருவதால், ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று ஆம்புலன்ஸில் காத்திருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடலில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளன'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x