Last Updated : 10 May, 2021 04:31 PM

 

Published : 10 May 2021 04:31 PM
Last Updated : 10 May 2021 04:31 PM

கரோனா ஊரடங்கு: சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடல்; 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று (மே 10) தொடங்கி இம்மாதம் 24ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் இன்று மூடப்பட்டன. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும் பட்டாசு உப தொழில்கள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்களும் மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவி வருவதால் இம்மாதம் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழில் முடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களும் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகையில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு 3 முறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்களும் வேலை இழந்தனர்.

தற்போது கரோனா வைரஸ் பரவல் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது ஒருவகையில் வரவேற்கத்தக்கது என்றாலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழக அரசு பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.ஆயிரம் வழங்குவதாக கடந்த ஆண்டு முதல்வர் அறிவித்து வழங்கினார்.

தற்போது தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாகவும், அதில் முதல் தவணை ரூ.2 ஆயிரம் தற்போது வழங்குவதும் வரவேற்புக்குரியது.

தீப்பெட்டி உற்பத்தி அத்தியாவசிப் பொருள் தயாரிப்பு என்று கூறி 50 சதவிகித தொழிலாளர்களுடன் உற்பத்தியை மேற்கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.

இதேபோன்று, பட்டாசு உற்பத்தி மற்றும் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 50 சதவிகித பணியாளர்களுடன் உற்பத்தியை மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x