முதல்வர் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குக: மத்திய அரசுக்கு மதுரை எம் பி. சு.வெங்கடேசன் கடிதம்

முதல்வர் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்து வழங்குக: மத்திய அரசுக்கு மதுரை எம் பி. சு.வெங்கடேசன் கடிதம்
Updated on
1 min read

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழகத்திற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்க வலியுறுத்தி மதுரை மக்களவை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இடம் ஓர் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.

ஒரு நோயாளிக்கு 6 குப்பிகள் வீதம் 1166 நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்ககூடிய ரெம்டெசிவிர் மருந்தை மத்திய அரசு அளிக்கிறது. இந்த தினசரி அளவை 3 மடங்காக உயர்த்த அவர் கோரியுள்ளார்.

தின அளிப்பை 7000 லிருந்து 20000 ஆக உயர்த்துமாறு அவர் கோரியுள்ளார்.

ரெம்டிசிவிர் மருந்தானது நெஞ்சகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு அவசரமாய்த் தேவைப்படுகிறது. ஆனால், தேவைக்கும் அளிப்பிற்குமான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது.

தமிழகத்தின் தேவை பற்றி முதல்வர் கூறுவதற்கு நான் கள சாட்சியத்தை மதுரையில் காண்கிறேன். மதுரைக்கு தின அளிப்பு 500 மட்டுமே. ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் தினமும் 80 நோயாளிகளுக்குகே போதுமானது. ஆனால் மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாக உள்ளது. எண்ணிக்கை 250 பேரைக் கடக்கிறது.

இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்ததால் என்ன ஆகும் என்ற கவலை மனதைக் கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும்.

நேரம் கடுகி ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.

முதல்வரின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பியூஷ் கோயல் (ரயில்வே மற்றும் வர்த்தகம்) ஹர்ஷ வர்தன் (சுகாதாரம்) ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in