Last Updated : 10 May, 2021 02:49 PM

 

Published : 10 May 2021 02:49 PM
Last Updated : 10 May 2021 02:49 PM

இலங்கைக்கு கடத்த முயன்ற 1620 கிலோ மஞ்சள் பறிமுதல்: தூத்துக்குடியில் 6 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1,620 கிலோ மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு மற்றும் சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு விரலி மஞ்சள், பீடி இலை, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லி விதைகள், வெங்காய விதைகள் உள்ளிட்ட பொருட்கள் அண்மைக்காலமாக அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து இந்திய கடற்படை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், சுங்கத்துறையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், உள்ளூர் போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் போலீஸார் இன்று அதிகாலை 2 மணியளவில் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பகுதியில் சரக்கு ஆட்டோவில் இருந்து சிலர் ஒரு படகில் சாக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கண்ட போலீஸார் அங்கு விரைந்து அவர்களை சுற்றி வளைத்து மடக்கினர். சரக்கு ஆட்டோ மற்றும் படகில் சோதனை நடத்திய போது அவைகளில் 54 மூட்டைகளில் 1,620 கிலோ விரலி மஞ்சள் இருந்தன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இதனை அவர்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தி சரக்கு ஆட்டோ, நாட்டுப் படகு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் தொடர்பாக படகின் உரிமையாளரான திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த மீராசா மகன் செய்யது உமர் (40), டூவிபுரம் 3-வது தெருவை சேர்ந்த மைக்கிள் மகன் அந்தோணி (42), திரேஸ்புரம் எம்சிஎப் காலனியை சேர்ந்த ஜோசப் அமலதாஸ் பெனிடிக்ட் மகன் ஜோசப் ஜனோ (25), திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த கபீர் சுல்தான் மகன் நாகூர்கனி (42), கீழ அலங்காரத்தட்டை சேர்ந்த ஜோசப் மகன் அந்தோணிராஜ் (39), சரக்கு ஆட்டோ ஓட்டுநரான திரேஸ்புரம் மாதவநாயர் காலனியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் சார்லஸ் (33) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட 6 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், படகு மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றையும் கியூ பிரிவு போலீஸார் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x