Published : 10 May 2021 09:06 AM
Last Updated : 10 May 2021 09:06 AM

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரைதமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினரும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
360 இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் 35 மேம்பாலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன

ஊரடங்கு காலத்தில் தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்கலாம். இவை தவிர டாஸ்மாக் மதுபானக் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி, மீன் இறைச்சி ஆகியவை 12 மணிவரை விநியோகிக்கலாம்.

உணவகங்களில் பார்சல் சேவைக்கும், உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள்,பூச்சிக்கொல்லி, உரம், விதை, மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம். தலைமைச்செயலகம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட முக்கிய துறைகள் தவிர மற்ற அரசுத் துறைகள் இயங்காது.

தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களும் விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகளும் இயங்காது.

மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையே தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு, வேலை வாய்ப்பு, மருத்துவமனைக்கு செல்ல உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்.

பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்கள், ஆக்சிஜன், எரி பொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். ரேஷன் கடைகள் காலை 8 முதல் 12 மணி வரை செயல்படும். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x