Published : 22 Dec 2015 09:07 AM
Last Updated : 22 Dec 2015 09:07 AM
கொலை வழக்கு ஒன்றில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருப்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கோவில்பாளையம்புதூர் காலனி அருகே உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர் கே.சாமிநாதன் (38). இவர், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கும், அருகே வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கும் அடிக்கடி பிரச்சினை எழுந்துள்ளது.
அப்போது காலனி மக்களை தரக்குறைவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சாமிநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், சாமிநாதனை கொலை செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 2014 ஜனவரி 3-ம் தேதி இரவு, தோட்டம் அருகே உள்ள பாலத்துக்கு சாமிநாதனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அனைவரும் மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருந்த சாமிநாதனை, இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
சாமிநாதனின் மைத்துனர் பழனிச்சாமி அளித்த புகாரின்பேரில், அவிநாசிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, காலனியைச் சேர்ந்த சண்முகம், மணிகண்டன், செந்தில்குமார், வெள்ளிக்கிழமை (எ) ராமசாமி, வீராசாமி (எ) சாமிநாதன், ஈஸ்வரன், சுப்பிரமணியம், முருகேசன், சேகர் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
முன்னதாக, அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி ஏ.முகமது ஜியாவுதீன் நேற்று தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT