Last Updated : 07 Dec, 2015 12:18 PM

 

Published : 07 Dec 2015 12:18 PM
Last Updated : 07 Dec 2015 12:18 PM

பூட்டிய வீடுகளில் வேலை-யைக் காட்டும் கொள்ளையர்கள்

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் பூட்டிய வீடுகளை கொள்ளையர்கள் வேவு பார்த்து வருவதாக வந்த தகவல்களையடுத்து முன்னெச்சரிக்கையாக அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் இடைவிடாது கொட்டிய மழையால் பாதிக்கப்பட்டு முற்றிலும் சிதைந்த தங்களது வீடுகளை பூட்டிவிட்டு மக்கள் உதவி கிடைக்கும் இடங்கள், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் என கொத்து கொத்தாக இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். பிழைப்புக்காக சென்னையில் வசித்த பலரும் வீடுகளை பூட்டிவிட்டு ஓரிரு உடமைகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலை கொள்ளையர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தலை அடுத்து தமிழக போலீஸார் பாதிக்கப்பட்ட இடங்களில் பூட்டிய வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இரவு நேர ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் தங்களது பகுதியைச் சாராத மர்ம நபர்கள் நோட்டமிடுவதாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் சந்தேகிக்கும் நிலையில் செல்பவர்களை போலீஸார் விசாரித்து அனுப்புகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் ரோந்து வாகனங்களுடன் இரவு நேரப் பணியில் ஈடுபட்டு வருவதாக டி.ஜி.பி. அஷோக் குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அடையாறு ஏரியோரம் மற்றும் அது போலான பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமாக கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகம் இருந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எங்களது தரப்பிலிருந்து உணவு, உடை மற்றும் மருந்து போன்றவைகளை வழங்கியும் வருகிறோம்." என்றார்.

இதைத் தவிர, தேசிய பேரிடர் படையும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளையும் நிவாரணங்களையும் முழுவீச்சில் வழங்கி வருகிறது. இதற்காக 24 மணிநேர உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து செயல்படும் உதவி மையத்துடன் கீழ்ப்பாக்கம் ஒருங்கிணைப்பு மையம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 011-24363260 மற்றும் +91-9711077372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x