Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் வெளியூர்களுக்கு இன்று இரவு வரை பேருந்து வசதி: போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

கரோனா பரவலை தடுக்க நாளைமுதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், தமிழகம் முழுவதும் இன்று இரவு வரை போதியஅளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க நாளை (மே 10) முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களுக்கு செல்லவும், சொந்தஊர் செல்வோருக்கு வசதியாகவும் மே 8, 9-ம் தேதிகளில் தடையின்றி போதிய அளவில் அரசுபேருந்துகளை இயக்க வேண்டும்என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக, நேற்று மதியம் முதலே சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல, கார் போன்ற சொந்த வாகனங்களிலும், கால்டாக்ஸி, வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் மக்கள் புறப்பட்டு சென்றனர். குறுகிய தூரம் செல்பவர்கள் பலரும் இருசக்கர வாகனங்களிலும் புறப்பட்டுச் சென்றனர். வெளியூர் செல்பவர்கள் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் கூடுதலாக 200-க்கும்மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 8, 9-ம் தேதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் வழித்தடங்களில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மக்களுக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாத வகையில் பேருந்து சேவை இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, 9-ம் தேதி இரவு வரை போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

ஊரடங்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதும், தேவையான அளவுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறோம். சென்னையில் இருந்து மட்டும் 2 நாட்களுக்கு தலா 9,300-க்கும் மேற்பட்ட பேருந்துகளை வெளியூர்களுக்கு இயக்க உள்ளோம். பயணிகள் முகக்கவசம் அணிந்து, கட்டாயம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘முழு ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படாது. எனவே, ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள். எனவே, மக்களின் தேவைக்கேற்ப தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளை இயக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x