Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரம்- ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலருக்கும் நுரையீரல் பாதிப்பு உள்ளதால், ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டன.

மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 612 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 235 படுக்கைகள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ளன. இவை அனைத்தும் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 50 படுக்கைகள் உள்ளன. மொத்தத்தில், 562 படுக்கைகள் நிரம்பிவிட்டன. தொற்றின் வேகம்அதிகரித்து வருவதால், விரைவில் படுக்கை இல்லாத சூழல் ஏற்படும் ஆபத்தும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 672 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 375 படுக்கைகள் கரோனாநோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாகக் கட்டப்பட்டு வரும் தாய்-சேய் நல சிகிச்சை மையத்தில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 347 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கட்டிடம் ஒரு வாரத்தில் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தற்போது இங்கு 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக 10 கிலோ லிட்டர் ஆக்சிஜன் வசதிக்கு நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தால், நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும்" என்றார்.

ஆய்வின்போது, ஆட்சியர் மகேஸ்வவரி, காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x