Published : 25 Dec 2015 12:29 PM
Last Updated : 25 Dec 2015 12:29 PM

தெற்கு ரயில்வேக்கு சவாலாகி வரும் ரயில் டிக்கெட் மோசடி விவகாரம்

அதிகாரபூர்வமற்ற வகையில் ரயில்வே டிக்கெட் முகவர்களாகச் செயல்படுபவர்கள் மீதான ரயில்வே பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையினால் புதுவிதமான மோசடி அம்பலமாகியுள்ளது.

சென்னை, கிரீம்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த அத்தகைய இரு போலி டிக்கெட் ஏஜெண்ட்களிடமிருந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய ஹார்டு டிஸ்க்கில் மோசடி செய்வதற்காகவே சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

இந்த ஹார்டு டிஸ்குகள் தற்போது பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சோதனைகளின் முடிவில் எந்தவகையான மோசடி, எந்த சாஃப்ட்வேர் மூலம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் அம்பலமாகும் என்று ஆர்பிஎப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் 800 அதிகாரபூர்வ டிக்கெட் ஏஜெண்ட்கள் உட்பட தமிழகம் முழுதும் மொத்தம் 1,500 டிக்கெட் ஏஜெண்ட்கள் உள்ளனர். இருப்பினும் போலி முகவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவர்கள் மென்பொருளைக் கொண்டு டிக்கெட் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, “போலி முகவர்கள் பல்வேறு விதங்களில் டிக்கெட் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் நேரடியாகச் சென்று டிக்கெட் புக் செய்யும் போது ரயில்வே அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது என்று காரணம் காட்டி அதிக தொகை வசூலிக்கின்றனர்.

ஆன்லைனில் டிக்கெட்டுகளை புக் செய்யும் போது சிறப்பு மென்பொருளைக் கொண்டு டிக்கெட் மோசடி செய்கின்றனர்” என்கின்றனர்.

அதாவது மூத்த குடிமகன்கள் பெயரில் டிக்கெட்டை புக் செய்து அதற்கான கட்டணச்சலுகையைப் பெறுகின்றனர். ஆனால் அதன் பிறகு மென்பொருளைப் பயன்படுத்தி தனது வாடிக்கையாளரின் உண்மையான வயதை அதில் ஏற்றி விடுகின்றனர். சில சமயங்களில் அயல்நாட்டினருக்கான டிக்கெட் ஒதுக்கீட்டுப் பிரிவிலும் கூட மோசடி முகவர்கள் டிக்கெட் புக் செய்து பிறகு அதனை மென்பொருள் கொண்டு மாற்றிவிடுகின்றனர், என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

"இந்த மோசடி அம்பலமாகும் போது குறிப்பிட்ட பயணியே டிக்கெட் பரிசோதகரிடம் அல்லது ஃபிளையிங் ஸ்குவாடிடம் சிக்குகிறார். டிக்கெட் பரிசோதகர், எந்த ஒதுகீட்டில் டிக்கெட் பெறப்பட்டுள்ளது மற்றும் வயது ஆகியவற்றை உறுதி செய்துகொள்வதில் தவறிழைக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் பிடிபட்ட பயணியின் டிக்கெட்டை ரத்து செய்து அபராதம் விதித்து பயணத்தை தொடர சில டிக்கெட் பரிசோதகர்கள் அனுமதிக்கின்றனர், ஆனால் அனைவரும் அப்படி அனுமதிப்பார்கள் என்று கூற முடியாது" என்று தமிழ்நாடு இ-டிக்கெட் முகவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த ஜாகிர் ஹுசைன் எச்சரிக்கிறார்.

பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் போலிமுகவர்கள் தொடர்ந்து இத்தகைய டிக்கெட் மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x