

தமிழக அரசு அறிவித்துள்ள 2 வார ஊரடங்கு தமிழகத்தில் நோய்த்தொற்றின் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும், ஏழைகள் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
“மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பாய் இருப்போம் தொடர் பரவலை தடுப்போம். கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் இச்சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய்த்தொற்றின் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருப்பதையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.
மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றும் நாளையும் கடைகள் திறந்திருக்கும் என்பதாலும் பொதுமக்கள் அவசரம் கொள்ளாமல் கூட்டங்களை தவிர்த்து பொறுமையாக சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம். அரசு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல ஏதுவாக வாடகை கார் மற்றும் ஆட்டோக்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும் மினி கிளினிக்குகள் எண்ணிக்கையும் அங்கு தற்காலிகமாக மருத்துவர்களின் நியமனத்தையும் அதிகரித்து 24 மணிநேரமும் இயங்க செய்தால் பெரிய அரசு மருத்துவமனைகளில் கூட்டம் குறையும், நோயாளிகளின் சிரமமும் களையப்படும்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக தொடர்ந்து கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் சேவையை கௌரவிக்கும் வண்ணம் அரசு ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகை வழங்கி அவர்கள் பணியை ஊக்குவிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தடுப்பு ஊசிகள் மருந்துகள் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.
உயிர்ப்பலி எண்ணிக்கையை குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நோயின் தீவிரத்தை உணர்ந்து அரசு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்