

கும்பகோணம் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் அதிகமாக வட்டி வசூலிப்பதாகக் கூறி கோபாலகிருஷ்ணன் என்பவர் நிதி நிறுவனத்தின் உள்ளே சென்று மண்ணெண்ணையை ஊற்றித் தீவைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). விவசாயியான இவர் கடந்த ஜூன் மாதம் ஆடுதுறையில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நகைகளை அடமானம் வைத்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
நேற்று மாலை கோபாலகிருஷ்ணன் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்திற்கு நகையை மீட்கச் சென்றுள்ளார். அப்பொழுது 40,000 ரூபாய் வட்டி கட்டவேண்டும் என கூறியுள்ளனர். அப்போது கோபாலகிருஷ்ணன் அதிக வட்டி வசூலிப்பதாகக் கூறி நிதி நிறுவனத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை நிதி நிறுவனத்திற்குள் ஊற்றித் தீவைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த நிதி நிறுவன நிர்வாகி மணிகண்டன், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் காவல்நிலையத்தார் கோபால கிருஷ்ணனைக் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோபாலகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.