Published : 08 May 2021 12:34 PM
Last Updated : 08 May 2021 12:34 PM

வரும் 15-ம் தேதிக்குள் மேலும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க தீவிரம்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் வரும் 15-ம் தேதிக்குள் மேலும் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 08) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கடந்த 200 ஆண்டுகளாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை ஸ்டான்லி அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனை ஏறத்தாழ 1,500 படுக்கைகளுடன் மிக சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு, கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை சிறப்பாக அளிக்கப்படுகிறது. இம்மாதிரியான ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு, திங்கள்கிழமை முதல் புதிதாக செயல்படவிருக்கிற 500 ஆக்சிஜன் படுக்கைகள், ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை கூடம் ஆகியவற்றை பார்வையிட்டோம். கோவிட் தொற்றாளர்கள், பொதுமக்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தோம்.

முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பிருந்தே முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசித்து, கரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், ஏற்கெனவே கடைகள் மூடல், கடைகள் திறப்பு உள்ளிட்ட விஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகங்களுக்கு வர வேண்டியதில்லை என்ற உத்தரவும் முதல்வரால் பிறப்பிக்கப்பட்டது. நேற்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். மருத்துவ நிபுணர்கள், வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆலோசனைகளை அதில் எடுத்துரைத்தனர்.

தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில், திங்கள்கிழமை முதல் 15-ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகள் தயாராகியிருக்கிறது. நந்தனம் கோவிட் கண்காணிப்பு மையத்தில் 800 ஆக்சிஜன் படுக்கைகளை முதல்வர் நேற்று பார்வையிட்டார்.

மேலும், 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் வேண்டும் என்கிற கோரிக்கை மருத்துவத்துறையினரால் முதல்வரிடத்தில் வைக்கப்பட்டது. உடனடியாக அதற்கான நடவடிக்கையில் ஈடுபட முதல்வர் வலியுறுத்தியிருக்கிறார்".

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x