

தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கிற முழு ஊரடங்கால் வேலையிழக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை- எளிய மக்கள் பசியால் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் மூன்று வேளைகளும் கட்டணமின்றி தமிழக அரசு உணவு வழங்கிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு இன்றும் நாளையும் மட்டுமே இருப்பதால் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிட வேண்டும்.
மேலும் கடந்த முறை போல அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் குவிவதைத் தடுப்பதற்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு எந்தப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். கூடுதல் விலையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுப்பதற்கு முறையாக கண்காணிப்பினை மேற்கொள்வதும் அவசியமாகும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.