Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் கரோனா தொற்று ஏற்பட்ட 11 பேர் உயிரிழப்பு: தற்காலிக கரோனா வார்டு பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொடர்ந்து அதிகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்தில் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 250 ஆக இருந்தது. தற்போது அது 850 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது பரவி வரும் கரோனா பலருக்கு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. பலருக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், பல்வேறு மருத்துவமனைகள் நிரம்பி வருவதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது 375 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக உள்ளன. அதில் 250 படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கும் வசதி உள்ளது. அரசு மருத்துவமனையில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இதனால் நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு மட்டுமே படுக்கைகள் வழங்கப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பலர் நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் இறந்துள்ளனர்.

எனவே, இரவு நேரங்களில் கரோனா நோயாளிகளை கண்காணிக்க கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்க வேண்டும். மருத்துவமனையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடம் தற்காலிக கரோனா வார்டாக மாற்றப்பட உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.

இதற்கான பணிகளை துரிதப்படுத்தி விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது பரவி வரும் கரோனா பலருக்கு மரணத்தை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x