அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறல்: திமுக நிர்வாகி மீது புகார்

அறக்கட்டளை அலுவலகத்தையொட்டி வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்.
அறக்கட்டளை அலுவலகத்தையொட்டி வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்.
Updated on
1 min read

திருப்பத்தூர் லயன்ஸ் அறக் கட்டளைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகி மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர் லயன்ஸ் அறக் கட்டளை நிர்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, "திருப்பத்தூர் ஈத்கா மைதானம் அருகே வாடகைக்கட்டிடத்தில் லயன்ஸ் அறக்கட்டளை அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில், லயன்ஸ் அறக்கட்டளை அலுவலக வளாகம் அருகே திமுக நகரச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.

இந்நிலையில், இந்த திருமண மண்டபத்துக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கான ஜெனரேட்டர் ஒன்று லயன்ஸ் அறக்கட்டளை வளாகத்தை யொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், லயன்ஸ் அறக்கட்டளை அலுவலகத்துக்கு உறுப்பினர்கள் வந்து செல்ல போதுமான பாதை வசதியில்லை.

மேலும், அத்துமீறி அமைக்கப் பட்ட ஜெனரேட்டரால் லயன்ஸ் அறக்கட்டளையின் முகப்பு வாயில் மறைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் லயன்ஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வந்தனர். அந்த இடம் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக நகரச் செயலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டபோது, முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மாறாக, அவரது ஆதரவாளர்கள் லயன்ஸ் அறக் கட்டளை உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, லயன்ஸ் அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அப்புறப்படுத்தி இடத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ இவ்வாறு அம் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் இது தொடர்பாக விசாரணை நடத்த நகர காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நகர காவல் துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in