ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களில் 7 பேர் உயிரிழப்பு: காரணம் என்ன?

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களில் 7 பேர் உயிரிழப்பு: காரணம் என்ன?
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் நேற்றும், இன்றும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 3 பெண்களில் ஒருவர் கரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சுவாசத் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்களுக்கு இணை நோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மற்றொரு ஆண் இன்று பிற்பகலில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு, நேற்றும், இன்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஷர்மிளாவிடம் கேட்டபோது, ‘‘கரோனா பாதிப்பால் உயிரிழந்தது ஒரு பெண் மட்டும்தான். மற்றவர்கள் சுவாசத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்கள். அவர்களுக்குக் கூடுதலாக ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய் பாதிப்புகள் உள்ளன.

மேலும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள், ஏற்கெனவே தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு தீர்வு கிடைக்காமல் இறுதியாக வருகின்றனர். பிரச்சினை முற்றிய நிலையில் வருபவர்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, நோய்ப் பிரச்சனை உள்ளவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு முதலிலேயே வந்து சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்.

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்காக ஆரம்பக் கட்டத்திலேயே அனுமதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் பிரச்சினை உள்ளவர்கள் நேரடியாக முதலிலேயே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துவிட வேண்டும். இதுகுறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in