Published : 07 May 2021 06:31 PM
Last Updated : 07 May 2021 06:31 PM

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காரசார விவாதம்: எதிர்க்கட்சித் தலைவர் யார்? 

சென்னை

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை தொடங்கியது. இதில் கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தோல்விக்கான காரணங்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து காரசார விவாதம் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 65 இடங்களைப் பெற்று ஆட்சியை இழந்தது. அதிமுக கூட்டணிக் கட்சிகள் 10 இடங்களைப் பெற்றன. பாஜகவுடன் கூட்டணி, 10.5% வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து அவசரப்பட்டு முடிவெடுத்தது, மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்காமல் இருந்தது, உட்கட்சிப் பூசல், கரோனா பரவலை சரியாகக் கையாலாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

இந்தத் தேர்தலுக்கு முன்னரே அமமுகவையும், சசிகலாவையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளலாம் என அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அதை ஏற்கவில்லை. இதனால் 20 இடங்களில் அதிமுகவின் வாக்குகளை அமமுகவினர் பிரித்தனர். போட்டி வேட்பாளர் சேந்தமங்கலம் வாக்குகளைப் பிரித்ததால் அந்தத் தொகுதியில் அதிமுகவின் வெற்றி பறிபோனது.

இதேபோன்று சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என்று கருதப்பட்ட சிஏஏ சட்டத்தில் அதிமுகவின் இரட்டை நிலைப்பாடு சிறுபான்மை மக்கள் வாக்குகளை இழக்கக் காரணமாக அமைந்தது. சென்னை மண்டலம், மத்திய மண்டலம், திருவண்ணாமலை, டெல்டா உள்ளிட்ட பல மண்டலங்களில் அதிமுக பலத்த தோல்வியைச் சந்தித்தது. அதிமுகவில் பல அமைச்சர்கள் தொகுதியை விட்டு வெளியே வராமல் தொகுதியிலேயே முடங்கினர்.

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்டாலினுக்கு இணையாகப் பிரச்சாரம் செய்தார். ஆனாலும், கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றது. 10 அமைச்சர்கள் தோற்றுப்போயினர்.

இந்நிலையில் 65 இடங்களைப் பெற்ற அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராக அமர வாய்ப்புள்ளது.

''எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கட்சித் தலைவராக சூறாவளி சுற்றுப்பயணம் செய்ததே இந்த அளவுக்குத் தோல்வியைத் தவிர்த்து 65 இடங்களைப் பெற்றுள்ளோம், அவரது மாவட்டத்திலும் 100% சதவீத வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஓபிஎஸ் அவரது மாவட்டத்தையே தாண்டவில்லை எனவே இபிஎஸ் தான் எதிர்க்கட்சித் தலைவர்'' என இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக ஓபிஎஸ் இருப்பதே சிறப்பு என சிலர் சில நாட்களாகப் பேசி வருகின்றனர்.

''இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராகப் போட்டதால்தான் கட்சி தோல்வியைத் தழுவியது. அதிமுகவுக்குத் தோல்வியைத் தேடித் தந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் கைக்கே வரவேண்டும். அவருக்கு நீண்ட அனுபவம் உள்ளது'' என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்து வருகிறது. உள்ளுக்குள் காரசார விவாதம் நடக்கிறது.

என்னதான் ஓபிஎஸ்ஸுக்கு வெளியில் ஆதரவு இருந்தாலும், கட்சிக்குள் எப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு அதிகம் என்பதால் அவரே எதிர்க்கட்சித் தலைவராக வர வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x