Published : 07 May 2021 04:33 PM
Last Updated : 07 May 2021 04:33 PM

சிறந்த இந்தியாவுக்காக இணைந்து பணியாற்றுவோம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து

சிறந்த இந்தியாவுக்காக இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வென்றவர்கள் 8 பேர் என்று மொத்தம் 133 பேருடன் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் இன்று (மே 7) காலை எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''அன்புமிக்க ஸ்டாலின், நீங்கள் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்று புதிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறீர்கள். நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். பல நூற்றாண்டுகளாக மலையாளிகளும் தமிழர்களும் பகிர்ந்து வரும் சகோதரத்துவ அன்பை நாம் மேலும் ஆழப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். சிறந்த இந்தியாவுக்காக இருவரும் இணைந்து பணியாற்றுவோம்'' என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x