'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' எனும் நான் எனப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: கண்கலங்கிய துர்கா
Updated on
1 min read

தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்று வருகின்றனர். அப்போது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக் கூறி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். இந்த விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.

கூட்டத்தில் புதிய அரசியல் நாகரிகமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றார். அவருடன் தனபால், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார். பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றார். மறுபுறம் ஸ்டாலின் குடும்பத்தார் அமரவைக்கப்பட்டனர். சுமார் 500 பேர் வரை விழாவில் பங்கேற்றனர்.

காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு இலச்சினையுடன் கூடிய காரில் ஏறி ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் கிளம்பி வந்தார். சரியாக 8.55 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். சரியாக 9.10 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்றார்.

ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி, ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in