Published : 07 May 2021 09:23 AM
Last Updated : 07 May 2021 09:23 AM

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பு: ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை

தமிழக முதல்வராக ஸ்டாலினும், அதைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். ஆளுநர் பன்வாரிலால் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார்.

இந்த விழாவில் மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர். இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், எல்.முருகன், டிடிவி தினகரன், கமல்ஹாசன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் புதிய அரசியல் நாகரிகமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றார். அவருடன் தனபால், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்றார். பாஜக சார்பில் இல.கணேசன் பங்கேற்றார். மறுபுறம் ஸ்டாலின் குடும்பத்தார் அமரவைக்கப்பட்டனர். சுமார் 500 பேர் வரை விழாவில் பங்கேற்றனர்.

காலை 8.45 மணிக்குத் தனது இல்லத்திலிருந்து அரசாங்கம் வழங்கிய அரசு இலச்சினையுடன் கூடிய காரில் ஏறி ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் கிளம்பி வந்தார். சரியாக 8.55 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேடையில் அமர்ந்த ஸ்டாலின், அமைச்சர்களிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்றபின் நடைமுறைகள் என்னென்ன என்று ஸ்டாலினிடம் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் விளக்கிக் கூறினார்.

சரியாக 9 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் அரங்கிற்கு காரில் வந்து இறங்கினார். ஆளுநரை திமுக தலைவர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் பதவி ஏற்க உள்ள அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் ஆளுநருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் சில நொடிகள் பேசினார் ஆளுநர். பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் ஸ்டாலினுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலின் எனும் நான் என ஆளுநர் சொல்ல, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று கூறி ஸ்டாலின் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொண்டார். அப்போது துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். யாரும் கவனிக்காவண்ணம் கண்களை துடைத்துக் கொண்டார். பின்னர் அவருக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஆளுநருக்குப் பொன்னாடை போர்த்தி ஸ்டாலின் பூங்கொத்து அளித்தார். அதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் வரிசையாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x