Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார்?- அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இன்று முடிவு

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதுகுறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

திமுக ஆட்சியைப் பிடித்த நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அதிமுகவைப் பொருத்தவரை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மூத்த அமைச்சர்களாக இருந்த திண்டுக்கல்சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பழனிசாமியை கொண்டுவர எம்எல்ஏக்களில் ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டுவர மற்றொரு தரப்பினரும் விரும்புகின்றனர். ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், பழனிசாமி இதைஏற்றுள்ளதாகவும் கூறப்படு கிறது.

இதற்கிடையே, ‘‘எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே தேர்வு செய்யப்படுவார். பழனிசாமியுடன் பேசி இதுகுறித்து முடிவெடுப்பார்கள்’’ என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவுசெய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்றுமாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.மாநிலங்களவை எம்பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் தற்போது எம்எல்ஏக்கள் ஆகியுள்ளதால், எந்தப் பதவியை விட்டுக் கொடுப்பது என்பது குறித்தும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x