Last Updated : 06 May, 2021 09:20 PM

 

Published : 06 May 2021 09:20 PM
Last Updated : 06 May 2021 09:20 PM

அதிமுகவைத் தொடர்ந்து திமுக ஆட்சியிலும் தென்மாவட்டத்தை அலங்கரிக்கும் ‘நிதி அமைச்சர்’

தமிழகத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 125 இடங்களைப் பிடித்து, தனிப் பெரும்பான்மை பலத்துடன் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

நாளை நடக்கும் எளிமையான பதவியேற்பு விழாவில் அவர் முதல்வராகவும், பிற அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். இன்று வெளியிடப்பட்ட 34 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலில் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தலா இருவருக்கு அமைச்சர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தில் மட்டும் 8 பேர் வரை இடம் பெற்றுள்ளனர். ஒருசில சமூகம் தவிர, கட்சியில் வெற்றி பெற்ற அனைத்துச் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், அமைச்சரவைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது.

தமிழக அமைச்சரவையில் முதல்வருக்கான பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்டச் செயலாக்கம் துறைகளைத் தொடர்ந்து அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது நிதித்துறை எனலாம்.

மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலங்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பல முறை நிதியமைச்சராக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர் சிறிது காலம் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்றாலும், மீண்டும் ஒன்றாக இணைந்தபோதிலும், அவருக்கே நிதித்துறை ஒதுக்கப்பட்டு கடைசி வரை தொடர்ந்தார்.

அந்த வகையில் திமுக ஆட்சியிலும், தென்மாவட்டத்தைச் சார்ந்த ஒருவருக்கே நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பதை தென்மாவட்ட திமுகவினர் மட்டுமின்றி, மக்களும், பிற கட்சியினரும் வரவேற்கின்றனர். மேலும், நிதியைத் தொடர்ந்து வருவாய்த்துறை, தொழில் துறை, ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, உணவு, பத்திரப் பதிவு, கூட்டுறவுத்துறை போன்ற பிற முக்கியத் துறைகளுக்கும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் தென்மாவட்ட வளர்ச்சிக்கு அவர்கள் பாடுபடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x