

கோவையில் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படும் ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தில் அறிகுறிகளற்ற கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாமல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பாரதியார் பல்கலைக்கழகம், கொடிசியா வளாகம், மத்தம்பாளையம் காருண்யா மையம், கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு சிகிச்சை பெற விருப்பம் இல்லாமல் தனியாகத் தங்க விரும்புபவர்களுக்கு வசதியாக ஹோட்டல்களில் கிசிச்சை மையம் அமைக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. அதன்படி, இதுவரை 10 ஹோட்டல்களுக்கு கோவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 499 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து இதுபோன்று கரோனா சிகிச்சை மையம் அமைக்க இன்னும் சில ஹோட்டல்கள் சுகாதாரத் துறையிடம் விருப்பம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “அறிகுறிகள் அற்றவர்கள், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், குணமாகும் வரை தங்களை அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, தொற்று உறுதியானவர்கள் முதலில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள 'டிரையேஜ்' மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்கு நோயாளியின் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு அறிகுறிகள் அற்றவர்கள், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் கரோனா சிகிச்சை மையங்களுக்குச் செல்லவும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர். தனியே ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் தங்க விரும்புவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கிக் கொள்ளலாம்.
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நினைப்பவர்களும் இதுபோன்ற ஹோட்டல்களில் தங்கிக் கொள்ளலாம். ஹோட்டல்களில் உள்ள வசதிக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். ஒவ்வொரு ஹோட்டலிலும், அதனுடன் இணைந்து செயல்படும் தனியார் மருத்துவமனையின் மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோர் பணியில் இருப்பார்கள். அவர்கள் நோயாளிகளைக் கண்காணித்துக் கொள்வார்கள். இதுபோன்று செயல்பட விரும்பும் ஹோட்டல்களில், போதிய வசதிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.