Last Updated : 06 May, 2021 07:15 PM

 

Published : 06 May 2021 07:15 PM
Last Updated : 06 May 2021 07:15 PM

கரோனா பரவல்; ஆதரவற்றோர்களை மீட்டுப் பராமரிக்கக் கோரி வழக்கு: அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதை அடுத்து, ஆதரவற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டோர்களை மீட்டுப் பராமரிக்கக் கோரிய வழக்கில் அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் கரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்கள், காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மனநலம் பாதிக்கப்பட்டோர்கள், சுற்றித் திரியும் ஆதரவற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

ஊரடங்கு நாட்களில் இவர்களுக்குப் போதிய குடிநீர், உணவு இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் பட்டினிச் சாவு ஏற்படுகிறது. கரோனா முதல் அலையின்போது ஆதரவற்றோர், மனநலன் பாதிக்கப்பட்டோருக்கு மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை சேர்ந்து உணவு அளிக்கப்பட்டது.

அவர்களில் சிலர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உறவினர்களிடம் சேர்க்கப்பட்டனர். எஞ்சியவர்கள் தனியார் அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள் மூலம் சில நாட்கள் பராமரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர். இதனால் மதுரையில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் உள்ளனர்.

கரோனா 2ஆம் அலை ஊரடங்கு நேரங்களில் அவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கும், இவர்களால் மற்றவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மதுரையில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, உணவு, குடிநீர், தங்கும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக அரசிடம் அரசு வழக்கறிஞர் தகவல் பெற்று, நீதிமன்றத்துக்குத் தெரிவிக்க உத்தரவிட்டு, அடுத்த விடுமுறை கால நீதிமன்றத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x