Published : 06 May 2021 03:49 PM
Last Updated : 06 May 2021 03:49 PM

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு; சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை: துணைநிலை ஆளுநர் தமிழிசை

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (மே. 6) புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, ஆளுநரின் ஆலோசகர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘புதுச்சேரியில் கரோனா தொற்றாளர்களை தொடர்ந்து கண்காணித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியில் மருத்துவ மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களுக்கு வேண்டிய அளவுக்கு படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இனாக்ஸ் நிறுவனத்தில் இருந்து 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்கிறது. தற்போது இது போதுமானது.

இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கை வசதியில் இருந்து 659 படுக்கை வசதி கொண்டதாக மாறுகிறது. அதேபோல், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 படுக்கைகள், மார்பு நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகள், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கை, தனியார் மருத்துவமனையில் 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியோடு அதிகரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே 1,276 படுக்கை வசதிகள் ஆக்சிஜன் வசதியோடு உள்ள நிலையில், தற்போது மேலும் 800 படுக்கை வசதிகள் ஆக்சிஜனோடு உருவாக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 50 படுக்கைகளும், மாஹே, ஏனாமில் தலா 20 படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல புதிய மருத்துவமனைகள், புதிய இடங்கள், உள்விளையாட்டு அரங்கம் போன்றவற்றில் ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

செயல்படாத மருத்துவமனைகள் சிலவற்றை எடுத்துஆக்சிஜனுடன் படுக்கைகளை மேம்படுத்த இருக்கிறோம். தனியார் மருத்துவ கல்லூரிகள் ஏற்கெனவே தலா 300 படுக்கைகளை அரசுக்கு ஒதுக்கியுள்ளன. தற்போது அங்கு அரசின் உதவியுடன் இன்னும் 100 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை.

ஆனால், மக்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாடுடன் இல்லையென்றால், தட்டுப்பாடு என்ற நிலை வந்துவிடும். அதுவே மக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் தட்டுப்பாடு என்ற நிலை வராது. எனவே, மக்கள் முடிந்த அளவுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும்.

கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் 30 முதல் 50 வயதிற்குள்ளானவர்கள். எனவே, இளைஞர்கள் தயவு செய்து சாலையில் கூட்டம் கூடி எப்பொழுதும் போல் பேசி கொண்டிருக்காதீர்கள். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். தற்போது தனிமையில் இருப்பதுதான் நமக்கு நாமே செய்யும் மிகப்பெரிய உதவி. யாருக்கு கரோனா இருக்கிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடியாது. எனவே, தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மிகவும் சோர்வடைந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க உள்ளோம்.

அதன்படி, 328 ஆஷா பணியாளர்கள், 519 வார்டு அட்டெண்டர், 323 துப்புரவு பணியாளர்கள், 8 ஓட்டுநர்கள், 173 ஏஎன்எம்கள், 333 சுகாதார ஆய்வாளர்கள், 141 மருந்தாளுநர்கள், 76 லேப் டெக்னீஷியன்ஸ், 1,140 செவிலிய அதிகாரிகள், 3 நிர்வாக அலுவலர்கள், 281 மருத்துவர்கள் மற்றும் 11 அதிகாரிகளுக்கு ரூ.5 கோடிக்கு மேல் ஊக்கத்தொகை வழங்கப்படும்.’’ இவ்வாறு துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x