

தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு மாநகர பேருந்துகள் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கும் வகையில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இன்று முதல் (6-ம் தேதி) புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.