Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM
சென்னை புரசைவாக்கம் தானா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (59). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மருந்தகத்தில் இருந்த ரெம்டெசிவிர் மருந்துகளை சரிபார்த்தபோது, 6 மருந்து பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மருந்தக ஊழியரான ஓட்டேரியைச் சேர்ந்த ஜெய்சூர்யா (23) என்பவர்தான் ரெம்டெசிவிர் மருந்தை திருடியது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். திருடிய ரெம்டெசிவிர் மருந்தை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்தாமஸ் என்பவருக்கு ரூ.36 ஆயிரத்துக்கு விற்றதாக ஜெயசூர்யா தெரிவித்தள்ளார். இதையடுத்து, ஸ்டாலின் தாமஸையும் (42) போலீஸார் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (27) என்பவரை குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். மருந்து மொத்த வியாபாரம் செய்து வந்த இவர், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்தை ரூ.16 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT