Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

கரோனா தீவிர தொற்று நோயாளிகள் அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

சென்னை

கரோனா தீவிர தொற்று நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லேசான மற்றும் குறைந்த தொற்று பாதிப்பு உள்ளவர்கள் வீடுகள், கண்காணிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தீவிர தொற்றால் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத்திணறல் இருப்பவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகரிக்கும் உயிரிழப்பு

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதால், புதிதாக தீவிர தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சோகம் அடங்குவதற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 நோயாளிகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி 400 டன் கொள்முதல்

இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் தனியார் நிறுவனத்திடமிருந்து 400 டன் ஆக்சிஜன் வாங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் அரசு மருத்துவமனைகளில் தினசரி ஆக்சிஜன் தேவை 250 டன்னாக இருந்தது. பயன்பாட்டுக்குப்போக மீதமுள்ள ஆக்சிஜன் சேமிப்பில் வைக்கப்பட்டது. ஆனால், தற்போது தினசரி ஆக்சிஜன் தேவை 400 டன்னுக்கு அதிகமாக உள்ளது.

தினமும் வாங்கப்படும் 400 டன்னுடன், ஏற்கெனவே சேமிப்பில் உள்ள ஆக்சிஜனைக் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கின்றனர்.

மாற்று ஏற்பாடு அவசியம்

தமிழகத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு ஆக்ஜிசன் தேவைப்படுகிறது.

தற்போதுள்ள ஆக்சிஜனை இன்னும் ஒருவாரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின்னர் தினசரி வாங்கும் 400 டன் ஆக்சிஜன் கண்டிப்பாக போதுமானதாக இருக்காது. அதற்குள் ஆக்சிஜனுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையெனில், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் ஏற்படும் நிலை, தமிழகத்திலும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், புதுச்சேரி, கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளில் செயல்படும் தனியார் நிறுவனம்தான் தமிழகத்துக்கு 75 சதவீத ஆக்சிஜனை சப்ளை செய்கிறது.

கேரளாவில் தற்போது தொற்று அதிகரித்திருப்பதால், தமிழகத்துக்கு வரும் ஆக்சிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x