Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி இந்திரா காந்தி சிலைசதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். புதுவையில் புதிதாக தேர்வான 6 பாஜக எம்எல்ஏக்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கண்டித்து கோஷமிட்டனர். திடீரென மம்தா பானர்ஜியின் உருவப் படத்தை எரித்து,தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, விருத்தாசலம், வேப்பூர், கிள்ளை, பரங்கிப்பேட்டை, திட்டக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புவனகிரியில் ஒன்றிய பாஜக தலைவர் ராமநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாஜக நிர்வாகி ஜானகி சுகுமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றிய துணைத்தலைவர் குணசேகரன், ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பாஜக தலைவர் விஏடி.கலிவரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் ராமஜெயகுமார், மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம், நகரத் தலைவர் ஜெய்சங்கர், ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் தாஸசத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்புநடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் வழக்கறிஞர் செல்வவிநாயகம், நகரத் தலைவர் சர்தார் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x