Published : 05 May 2021 05:10 PM
Last Updated : 05 May 2021 05:10 PM

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை; அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி: தமிழக அரசு உத்தரவு 

சென்னை

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றலாம், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று தமிழக தொற்று எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டிச் செல்கிறது. சென்னையில் பாதிப்பு 6,150 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் 1618, கோவையில் 1566, திருவள்ளூரில் 1207, சேலத்தில் 607, திருச்சியில் 653, காஞ்சிபுரத்தில் 835, தூத்துக்குடியில் 707 எனப் பல மாவட்டங்களில் நேற்றைய கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். நாள்தோறும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 144 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் கூட படுக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் வாடி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்துப் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. நாளையிலிருந்து பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. கரோனா அலை பரவலைத் தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று கூடுதலாக சில அறிவிப்புகளை அரசாணையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதல் அரசாணையில் குரூப் ஏ அதிகாரிகளைத் தவிர மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.

அரசாணையில் தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணி சார்ந்த அலுவலகங்களில் வருகை மாற்றி அமைக்கப்பட்டு குறைக்கப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அந்தந்த அலுவலகச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்க வேண்டும். குரூப் ஏ அலுவலர்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரும் தினசரி வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அனைவரும் மே 6 முதல் 20 வரை அலுவலகம் வரத் தேவையில்லை என ஆளுநர் தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இந்தக் காலகட்டத்தில் இயங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x