Published : 05 May 2021 03:09 PM
Last Updated : 05 May 2021 03:09 PM

இரண்டாவது அலை ஏன் தீவிரமாக உள்ளது? கரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்புவது எப்படி? -பொது சுகாதார வல்லுநர் குழந்தை சாமி கூறும் தகவல்

கரோனா இரண்டாவது அலை பரவலின் வேகம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வேகமாகப் பரவி வருகிறது. அதன் தாக்கம் முதல் அலையை விட மும்மடங்கு இருக்கும் என்ற நிலையில், இரண்டாவது அலையிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“முதல் அலையின்போது பெரும்பாலும் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கே தொற்று அதிகமாக ஏற்பட்டது.

தற்போது தொற்று ஏற்படாத அனைவருக்கும் தொற்று ஏற்படுவதால் இணை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்குத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

வயது குறைந்தவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

* நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.

தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள அபாயகரமான இடங்கள்

1. காற்றோட்ட வசதி இல்லாத கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் முதலான இடங்கள் (crowded, closed and contained spaces).

* முன்கதவைத் தவிர வேறு கதவுகளோ ஜன்னல்களோ இல்லாத கடைகள் மிகவும் அபாயகரமானவை.

மருத்துவமனைகள்

* தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்குப் போகக் கூடாது.

* உற்றார், உறவினர்களைப் பார்க்க மருத்துவமனைகளுக்குப் போகக் கூடாது.

* பிரசவத்தின்போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion) உடன் இருந்தால் போதுமானது. குழந்தையைப் பார்க்க உறவினர்கள் நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரக்கூடாது.

உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஆரோக்கியமாக இருக்கும் வயது குறைந்த ஆரோக்கியமான உறவினர் ஒருவர்/ இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஒருவர் உடனிருக்கலாம்.

* கரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

*மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

* மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

*வீட்டில் உள்ளவர்கள் பல்ஸ் ஆக்சிமீட்டர் வைத்து ஆக்சிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

* ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திற்கும் கீழாகக் குறைந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம்.

* ஆக்சிஜன் அளவு மிக மிக அபாயகரமான அளவான எழுபது சதவீதத்திற்கும் கீழாகக் குறையும்போதுதான் மூச்சுத்திணறல் ஏற்படும்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்றால் போதும் எனத் தவறாக நினைத்துக்கொண்டு காலதாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தும்.

பொதுமக்கள் கரோனா தொற்று ஏற்படாமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

1. முகக்கவசம் அணிதல்.

2. கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்.

3. சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தள்ளி இருத்தல்.

4. கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்.

5. கதவு, ஜன்னல்களை நன்கு திறந்து காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுதல்.

6. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல்.

பாதுகாப்பான இடங்கள்

* திறந்தவெளிக் கடைகள், வெளியே நின்றுகொண்டு பொருள்கள் வாங்கும் வகையில் உள்ள மளிகைக் கடைகள், திறந்தவெளி காய்கறிக் கடைகள், உழவர் சந்தை, வாராந்திர சந்தைகள், திறந்தவெளி ஹோட்டல்கள் முதலான காற்றோட்டம் மிகுந்த இடங்கள் பாதுகாப்பானவை.

எச்சரிக்கை

* நிலைமையின் தீவிரத்தைப் பொதுமக்கள் உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

* தற்போதுள்ள கடினமான சூழ்நிலையை மனதில் கொண்டு, பொதுமக்கள் அரசுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

* அரசு முழுமையான ஊரடங்கு விதிப்பதைத் தவிர்ப்பது மக்கள் கைகளில்தான் உள்ளது”.

இவ்வாறு குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x