Published : 05 May 2021 12:40 PM
Last Updated : 05 May 2021 12:40 PM

சிகிச்சைக்காக மரக்கூண்டில் அடைக்கப்பட்ட ‘ரிவால்டோ’; மயக்க ஊசி செலுத்தாமல் பிடித்த வனத்துறை

மசினகுடியில் மூச்சுவிடச் சிரமப்பட்டு வரும் ரிவால்டோ யானை சிகிச்சைக்காக கரால் எனும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. மயக்க ஊசி செலுத்தாமல் புது முயற்சியாக மரக்கூண்டுக்குப் பழக்கப்படுத்தி, யானையை வனத்துறையினர் தங்கள் வசமாக்கினர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாகச் சுற்றிவரும் ரிவால்டோ யானைக்குத் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு நுனிப்பகுதி துண்டானது. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் யானை சிரமப்பட்டு வருகிறது.

இரை தேடச் சிரமாக இருப்பதால், ரிவால்டோ எளிதில் உணவு கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளில் வலம் வர தொடங்கியது. யானையின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு மக்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர். எனினும் யானையை சிகிச்சைக்காக முதுமலைக்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்து, வாழைத்தோட்டத்திலிருந்து வன ஊழியர்களின் உதவியுடன் பழங்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர்.

மூன்று நாட்களாக இரவு பகலாகக் கவனமாக யானையை அழைத்துச் சென்றபோது, திடீரென யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியது. இதனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து வனத்துறையினர் வாழைத் தோட்டம் பகுதியில் மரக் கூண்டு அமைத்து யானைக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்நிலையில், ரிவால்டோவை முகாமுக்குக் கொண்டு செல்லக்கூடாது என வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலால் ரிவால்டோவைக் கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர் முயற்சி கைவிட்டது. இதனால், ரிவால்டோ மீண்டும் வாழைத்தோட்டம், மசினகுடி குடியிருப்புப் பகுதிகளிலேயே வலம் வந்தது.

இந்நிலையில், யானை சிரமப்பட்டு வருவதால், அதற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை முன்வர வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ரிவால்டோவுக்குச் சிகிச்சை அளிக்க அதை மரக்கூண்டில் அடைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடியாத நிலையில், என்ன செய்யலாம் என யோசித்த வனத்துறையினர், வாழைத்தோட்டத்தில் அமைக்கப்பட்ட மரக்கூண்டுக்குள் ரிவால்டோ தானாகவே செல்ல, அதற்குப் பழங்களைக் கொண்டு பழக்கப்படுத்தினர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் பழங்களை உண்ண ரிவால்டோ மரக்கூண்டுக்குள் வர, வனத்துறையினர் அதைக் கூண்டில் அடைத்தனர். அதன் நடவடிக்கையைக் கண்காணித்து, அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வருவதால், தங்களுக்கும், தங்கள் விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக வாழைத்தோட்டம் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதனால், யானைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதைப் பிடித்து சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காகக் கடந்த 4 நாட்களாக யானைக்குப் பழங்கள் கொடுத்து, அதை மரக்கூண்டுக்குள் அழைத்து வந்தோம். மரக்கூண்டுக்குப் பழக்கப்பட்ட நிலையில், இன்று காலை மரக்கூண்டில் யானை அடைக்கப்பட்டது. அந்த யானை மூச்சுவிட சிரமப்படுவதால் மயக்க ஊசி செலுத்தாமல், தானாகவே கூண்டுக்குள் அழைத்து வரப்பட்டது. இந்த புதிய முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.

யானையின் நடவடிக்கையைக் கண்காணித்து, நீதிமன்றத்தின் அனைத்து வழிக்காட்டுதல்களையும் கருத்தில் கொண்டு, கால்நடை மருத்துவ நிபுணர்களைக் கலந்தாலோசித்து, சிகிச்சை அளிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x