செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் பலியாக என்ன காரணம்?-  மாவட்ட ஆட்சியர் விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள 480 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பற்றாக்குறையை அடுத்து ஆக்சிஜன் அளவை குறைவாக கொடுத்தாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறியதாவது:

நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in