Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

நடப்பு மாதத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடையும்; மக்கள் சுய ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ள வேண்டும்: கோவை மயக்கவியல் நிபுணர் வேண்டுகோள்

நடப்பு மாதத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்பதால், இந்த மாதம் மட்டும் பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே சுய ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என கோவை மயக்கவியல் நிபுணரான மருத்துவர் பாலவெங்கட் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவையும் அதிகரித்துள்ளது.

முன்பை விட தற்போது 5 முதல் 10 மடங்கு ஆக்சிஜன் தேவைஅதிகரித்துள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளைத் தடுக்க, பொதுமக்கள் தங்களுக்கு தாங்களே, சுய முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ள வேண்டும் என கோவை கங்கா மருத்துவமனையின் மயக்கவியல் பிரிவு நிபுணரும், இந்திய மயக்கவியல் சங்கத்தின் தேசிய நிர்வாக குழு உறுப்பினருமான மருத்துவர் பாலவெங்கட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மேலும் அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வல்லுநர்களின் கருத்துபடி மே 15-ம் தேதிக்குப் பின்னர் உச்சத்தை அடையும் கரோனா தொற்று பரவல், மே 30-ம் தேதி வரை அதே உச்சத்தில் இருக்கும். அதன் பின்னர், தொற்று பரவல் குறையும். கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்துகளின் தேவை அதிகரிக்கும். இதை தடுக்க, கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

தொற்று பரவலைக் குறைக்க, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் தொற்றின் தீவிரத்தை உணர்ந்து, தங்களுக்குத் தாங்களே சுய ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தாத மற்றவர்கள் வீட்டிலேயே இருந்து, தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் தான், தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம்.

கரோனா முதல் அலையை விட, 2-வது அலை வேகமாகப் பரவக் கூடியது. முதல் அலையில் ஒருவர் மூலம் சராசரியாக மூவருக்கு தொற்று பரவினால், இரண்டாவது அலையில் ஒருவர் மூலம் சராசரியாக 7 பேருக்குத் தொற்று பரவும் வாய்ப்புள்ளது. முதல் அலையில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் தொற்று அதிகம் பரவியது. ஆனால், தற்போதைய இரண்டாவது அலையில் இளம் வயதினரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத் தான்கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் தொற்றால் பாதிக்கப்படு கின்றனர்.

கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், தங்களை தொற்று தாக்காது என்ற எண்ணத்துடன் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று வந்தாலும் தாக்கம் தெரியாது. ஆனால், அவர்கள் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு பரவிவிடும் வாய்ப்புகள் உள்ளன.

கரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், வீட்டில் உள்ளவர் கள் பாதுகாப்பாக இருக்கவும், நடப்பு (மே) மாதம் மட்டும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே சுய ஊரடங்கை கடைபிடித்து, வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் வெளியே செல்பவர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x