Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வழங்கினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 2-ம் தேதி வெளியாகின. திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. திமுக மட்டும் தனித்து 125 இடங்களை பிடித்து ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
234 தொகுதிகளுக்குமான இறுதி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அனுப்பி வைத்தார். தேர்தல் ஆணையம் அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ. கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தேர்தல் அதிகாரி ஆனந்த் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் பட்டியலை ஆளுநரிடம் சாஹூ வழங்கினார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்புக்கான நிகழ்ச்சி நடக்கும். அப்போது, தற்காலிக பேரவைத் தலைவரை ஆளுநர் நியமிப்பார். அவரது முன்னிலையில் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT