Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

விதிகளை மீறி தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 2-ம் தவணைக்கு அரசு மருத்துவமனைகளை நாடுவதாக புகார்

விதிகளை மீறி சில தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், அங்கு இரண்டாவது தவணை தடுப்பூசிக்கான இருப்புஇல்லாததால் அரசு மருத்துவமனைகளை நாடுவதாக அரசு மருத்துவர் கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. பின்னர், 45 வயதுக்குமேற்பட்ட அனைவரும் தடுப்பூசிசெலுத்தலாம் என அறிவிக்கப்பட் டது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகி றது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரூ.250 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அரசு அறிவுறுத்தலை மீறி கட்டணத்தை பெற்றுக்கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விநியோகம், முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு தடுப்பூசி இருப்பு இல்லை.எனவே, அங்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை, இரண்டாம் தவணை தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனை களுக்கு செல்லுமாறு அனுப்பி விடுகின்றனர். இதனால், தகுதியான45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “தனியார் மருத்துவமனைகளில் எவ்வாறு 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள் என தெரியவில்லை. அவர்கள் தற்போது முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுடன் வந்து எங்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதில், பலர் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். எந்த இணைநோயும் இல்லாதவர்கள். செல்வாக்கை பயன்படுத்தியோ, தெரிந்தவர்கள் மூலமாகவோ தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். போதுமான அளவு தடுப்பூசிகள் வந்தால் மட்டும் இதுபோன்ற நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இவர்களும் இரண்டாம் தவணை தடுப்பூசி கேட்டு வலியுறுத்துவதால், தேவையுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.

தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த தடுப்பூசி செலுத்தும் மையம் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினமே அங்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில், நேற்று காலையில் ஏராளமானோர் வந்து, தடுப்பூசிக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். வேறு வழியில்லாமல் வேறு இடத்தில் இருந்து 100 கோவிஷீல்டு தடுப்பூசிகளை எடுத்துவந்து செலுத்தினர். பின்னர், தடுப்பூசி முடிந்துவிட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, “நேற்று மாலை நிலவரப்படி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 400, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 662 என மொத்தம் 1,062 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பில் இல்லை. இனி தடுப்பூசி வந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x